Archives: ஏப்ரல் 2018

சங்கலிகளை முறித்தல்

ஸான்சிபாரின் ஸ்டோன் டவுன் பட்டணத்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச்சு தேவாலயத்திற்கு சென்றது உண்மையிலேயே ஒரு மறக்கமுடியாத அனுபவம். ஒருகாலத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரிய அடிமை சந்தை இருந்த அதே இடத்தில் இப்பொழுது அந்த ஆலயம் காணப்படுகிறது. ஆலய கட்டடத்தை வடிவமைத்தவர்கள் சுவிசேஷம் எப்படி அடிமை சங்கிலிகளை முறியடிக்கிறது என்பதை அடையாளமாகக் காண்பிக்க விரும்பினார்கள். இப்போது அது குற்றச்செயல்களும் கொடுமைகளும் அரங்கேறும் இடமாக இல்லாமல், ஆண்டவருடைய கிருபையை வெளிப்படுத்தும் ஒரு ஸ்தலமாக அது விளங்குகிறது.

இந்த ஆலயத்தை கட்டியவர்கள் இயேசுவின் சிலுவை மரணம் நமக்கு எப்படி பாவத்திலிருந்து விடுதலையை பெற்றுத்தருகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பினார்கள் – எபேசு சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபத்தில்: இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7) என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே ‘மீட்பு’ என்கின்ற வார்த்தை பழைய ஏற்பாட்டுக் கால சந்தையில் அடிமையாக விற்கப்பட்ட நபரை அல்லது பொருளை திரும்பபெறுவதற்கு பயன்படுத்தப்படும் பதம். பாவத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமையாகிப் போன நபரை இயேசு மீட்கிறார்.

பவுல் எழுதின நிருபத்தின் முதல் வார்த்தைகளில் (வச. 3-14) கிறிஸ்துவுக்குள் கிடைக்கபெறும் விடுதலையை நினைத்து அவர் எவ்வளவாய் மகிழ்கிறார் என்பதை பார்க்கிறோம். உள்ளத்தில் துதியும் ஸ்தோத்திரமும் பொங்க இயேசுவின் மரணத்தின் மூலமாக பாவப்பிடியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆண்டவருடைய இரக்கத்தின் கிரியையை அங்கே அளவளாவுகிறார். நாம் இனியும் பாவத்திற்கு அடிமையாக இருக்கவேண்டியதில்லை. ஆண்டவருக்கும், அவருடைய மகிமைக்காகவும் வாழ நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம்.

மறுபடியும் இயேசுவை நன்றாகக் கவனியுங்கள்!

நான் பார்த்ததிலேயே உண்மையுள்ள நபர் என்று ஒருவரை சொல்லக்கூடுமானால் அது சகோதரர் ஜஸ்டிஸ் ஆகத்தான் இருக்கமுடியும். தன் குடும்பம், தன் வேலை, தன் சபை பொறுப்பு என்று எல்லாவற்றிலும் அவர் உண்மையும் பொறுப்புள்ளவருமாய் இருந்தார். சமீபத்தில் பிள்ளைப்பருவத்தில் நான் போய்க்கொண்டிருந்த ஆலயத்திற்கு சென்றிருந்தேன். அங்கே பியானோ கருவியின் பக்கத்தில் தொங்கிகொண்டிருந்த பழைய ஆலயமணியை கவனித்தேன். அந்த நாட்களில், வேதபாடம் முடியப்போகிறது என்பதை உணர்த்த சகோதரர் ஜஸ்டிஸ் அந்த மணியிலிருந்து தான் ஒலியெழுப்புவார். காலத்தை தாண்டி அந்த ஆலயமணி இன்றும் நிலைத்து நிற்கிறது. சகோதரர் ஜஸ்டிஸ் கர்த்தரோடு இருக்கும்படி சென்று பல வருடங்கள் ஆனாலும், அவர் விட்டுசென்ற உண்மைத்துவத்தின் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.

எபிரயேர் 3-ஆம் அதிகாரம் ஒரு உண்மையுள்ள ஊழியன் மற்றும் ஒரு உண்மையுள்ள குமாரனை நம்முடைய கவனத்தின் கீழ் கொண்டுவருகிறது. தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் உண்மைத்துவத்தை நாம் மறுக்கமுடியாவிட்டாலும், விசுவாசிகளின் பார்வை இயேசுவின்மீதே இருக்கவேண்டும் என்று போதிக்கப்படுகிறது. “ஆகையால், பரிசுத்த சகோதரர்களே சகோதரிகளே… கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்” (வச. 1) சோதிக்கப்படுகிறவர்களுக்கு இது ஒரு பெரிய உற்சாகத்தைத் தருகிறது. உண்மையுள்ளவராகிய இயேசுவை பின்பற்றுவதனாலேயே இந்த சுதந்தரம் உண்டாகிறது.

சோதனையின் காற்றுகள் உங்களை சூழும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்து களைத்துபோய், எதுவும் வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தால் என்ன செய்வீர்கள்? இந்த வேதபகுதியில்-ஒரு விரிவுரை தொகுப்பில்-உள்ளது போல், “இயேசுவை நன்றாக உற்று கவனியுங்கள் (3:1). அவரை மறுபடியும் பாருங்கள் – மறுபடியும் மறுபடியும் பாருங்கள். இயேசுவை நாம் மீண்டும் மீண்டும் நம் பார்க்கும்போது, அவருடைய குடும்பத்திற்குள் வாழ்ந்திட அவர் நம்மை திடப்படுத்துகிறார்.

பணித்தள பயிற்சி

என் மகனின் அறிவியல் ஆசிரியர் நடத்தும் அறிவியல் முகாமுக்கு என்னை ஒரு மேற்பார்வையாளனாக இருக்கும்படி கேட்டார்கள். நான் தயங்கினேன். கடந்தகால தவறுகள் மற்றும் கெட்டப் பழக்கங்களோடு போராடிக்கொண்டிருக்கும் நான், எப்படி ஒரு முன்மாதிரியாக முடியும்? என் மகனை அன்புடனும் பண்புடனும் வளர்க்க ஆண்டவரே உதவினார். ஆனாலும் என்னை மற்றவர்களின் பிரயோஜனத்திற்கு ஆண்டவரால் பயன்படுத்த முடியுமா என்று சந்தேகித்தேன்.

ஒரு சில சமயங்களில், சம்பூரணரும், இருதயங்களையும் வாழ்க்கையையும் மாற்றக்கூடியவருமாகிய ஆண்டவர் ஏற்றகாலத்தில் நம்மை முழுமையாக மறுரூபமாக்குவார் என்பதை என்னால் முழுவதும் கிரகித்துக்கொள்ளமுடியவில்லை. தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதும்போது வேலையில் கிடைக்கும் பயிற்சியை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டு, விசுவாசத்தில் நிலைத்திருந்து, தேவன் அவனுக்கு அளித்த வரத்தை பயன்படுத்தும்படி சொன்னதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைப்பூட்டினார் (2 தீமோ. 1:6). தன்னகத்தே உள்ள மக்களுக்கு ஊழியம் புரிந்து அவர்களை வளர்ப்பதற்கு தேவையான அன்பையும், ஒழுக்கத்தையும் (வச. 7) தன் வல்லமையின் ஆதாரமாகிய ஆண்டவர் தனக்கு தருவார் என்பதில் தீமோத்தேயு தைரியம் அடையமுடியும்.

கிறிஸ்து நம்மை இரட்சித்து நம்முடைய வாழ்க்கையின் மூலம் அவரை கனப்படுத்த நம்மை தகுதிபடுத்துகிறார். அதற்கான விசேஷ தகுதி நம்மிடம் இருப்பதினாலன்று, நாம் ஒவ்வொருவரும் அவருடைய குடும்பத்தில் மதிப்பிற்குரிய அங்கத்தினராய் இருப்பதினாலேயே (வச. 9) அது நடக்கிறது.

தேவனிடத்திலும், பிறனிடத்திலும் அன்பாய் இருப்பதே நம்முடைய பங்கு என்பதை நாம் அறிந்துகொண்டால் நம்பிக்கையுடன் முன்னேறலாம். நம்மை இரட்சித்து, உலகத்தை பற்றி நமக்குள்ள குறுகிய தரிசனத்தை மாற்றி நமக்கு ஒரு உன்னத நோக்கத்தை கொடுப்பதே கிறிஸ்துவின் பணி. இயேசுவை நாம் அனுதினமும் பின்பற்றுகையில், அவர் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கெல்லாம் அவருடைய அன்பையும், சத்தியத்தையும் பகிர்ந்து பிறரை உற்சாகப்படுத்தும்போது அவர் நம்மையும் மறுரூபமாக்குகிறார்.

ஞானத்தின் அழைப்பு

பிரிட்டன் நாட்டின் பிரசித்திபெற்ற பத்திரிக்கையாளரும் சமுதாய ஆர்வலருமான மால்கம் மக்ரிஜ், தன்னுடைய அறுபதாவது வயதில் விசுவாச அனுபவத்திற்குள் வந்தார். அவருடைய எழுபத்தி-ஐந்தாவது பிறந்ததினத்தில், மனித வாழ்க்கையை பற்றிய இருபத்தி ஐந்து அறிய சிந்தனைகளை பகிர்ந்துகொண்டார். அதிலே ஒன்று, “சந்தோஷமாயிருக்கிற பணக்காரனை நான் சந்தித்ததேயில்லை. ஆனாலும், பணக்காரன் ஆகவேண்டும் என்று விரும்பாத ஏழையையும் நான் மிக அபூர்வமாகத் தான் சந்தித்திருக்கிறேன்”

நம்மில் அநேகர், பணம் நமக்கு சந்தோஷத்தை தராது, என்பதை ஏற்றுக்கொள்வர். ஆனாலும், அதனை நிச்சயிக்க கூடுதலான பணத்தை சேர்த்துக்கொண்டும் இருப்பர்.

ராஜா சாலமோனுக்கு இருந்த சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிட்டுள்ளனர். ஒருவேளை அவர் பெரும் செல்வந்தராக இருந்தாலும், பணத்திற்கும் ஒரு எல்லை உண்டு என்று அறிந்திருந்தார். நீதிமொழிகள் 8 அவருடைய அனுபவத்தை ஒட்டி எழுதப்பட்ட ஒன்று. அது எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் “ஞானத்தின் அழைப்பு”. “என் சத்தம் மனுபுத்திரருக்கு தொனிக்கும்…என் வாய் சத்தியத்தை விளம்பும் (வச. 4-7). வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல (வச. 10-11).

ஞானம் சொல்கிறது, “பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப் பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன் (வச. 19-21).

மெய்யாகவே இவைகள் அறிய செல்வங்கள்!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இது மதிப்புக்குரியது

ஜார்ஜ் ஸ்மித், வில்லியம் கேரி: ஷூமேக்கர் அண்ட் மிஷனெரி என்ற தனது புத்தகத்தில், கேரியால் ஞானஸ்நானம் பெற்ற முதல் விசுவாசியான கிருஷ்ணா பால் ஞானஸ்நானம் பெற்ற முக்கியமான தருணத்தைப் பற்றி எழுதுகிறார். கிருஷ்ணா பால் கங்கையின் சேற்று நீரிலிருந்து எழுந்த சமயம், இந்திய திருப்பணிகளில் ஒரு மைல்கல்லாக இருந்திருக்க வேண்டிய விஷயம், கேரியின் சூழ்நிலைகளால் சிதைக்கப்பட்டது. கேரியின் மனைவி மற்றும் அவரது ஊழியத்தின் கூட்டாளி ஜான் தாமஸ் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டனர். ஆயினும் அவர்களது அலறல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் மத்தியில், கேரி மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் இனைந்து ஒரு வங்காளப் பாடலைப் பாடினார் - காணாமல்போன ஆத்துமா வீடு வந்ததே.

ரோம சாம்ராஜ்ஜியத்தால் கிறிஸ்தவர்கள் பெரும் துன்புறுத்தலை எதிர்கொண்ட நேரத்தில், பவுல் ரோமாபுரியின் சபையினருக்கு எழுதினார். பவுல் முன்வைத்த சுவிசேஷத்தை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. அதற்கு பெரும் தியாகம் தேவைப்பட்டது. ஏறக்குறைய தனது மூன்றாவது மிஷனரி பயணத்தின் முடிவில், மற்றும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஒவ்வொரு கஷ்டத்தையும் தாங்கிய பிறகு, பவுல் "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (வ.37) என்று கூறினார். அவர் , துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசம் (வ.35) என்றனைத்தையும் மகிழ்ச்சியுடன் தாங்கினார், ஏனெனில் அவரை நம்பி ஒப்படைக்கப்பட்ட பிரதான பணியே காரணம். மிஷனெரி பணிகளில் முன்னோடியாக, ரோமாபுரியின் விசுவாசிகளை அவர்களின் உபத்திரவங்களைச் சகித்திட அவர் ஊக்குவிக்கிறார், ஏனெனில் கிறிஸ்துவின் விவரிக்கமுடியாத அன்பு அதற்கு "பாத்திரமானது" (வ.38-39).

வில்லியம் கேரி மற்றும் அப்போஸ்தலன் பவுல் ஆகியோரின் தியாகங்களை "மதிப்பானவையாய்" செய்த இந்த அன்பு, நமக்கும் வழங்கப்படும் அதே அன்புதான். குறிப்பாக நம்முடைய விசுவாசத்தின் நிமித்தம் பாடுகள் வரும்போது, நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்வோம் (மத்தேயு 5:10). பின்வாங்கி, சமரசம் செய்து கொள்ளாமல், கிறிஸ்துவின் அன்பு எப்போதும் "தகுதியானது" என்பதை அறிந்து நமது பாடுகளை எதிர்கொள்வோம். 

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ